மத்தியப்பிரதேசத்தில் நகராட்சி அலுவலரை பாஜக எம்எல்ஏ கிரிக்கெட் மட்டையால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிப்பு கட்டடங்களை இடிக்க நகராட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலரை அனைவரின் முன்னிலையில் பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியா கிரிக்கெட் மட்டையால் தாக்கினார். கட்டிடங்களை இடிக்க கூடாது என தனது ஆதரவாளர்களுடன் ஆகாஷ் விஜய் வர்கியா கேட்டதற்கு மறுத்ததாலேயே நான் தாக்குதலுக்கு உள்ளானேன் என்று நகராட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. அதில் இன்னும் 5 நிமிடத்தில் நீங்கள் இந்த இடத்தில் இருந்து கிளம்பாவிட்டால் நடப்பதற்கு நீங்கள்தான் பொறுப்பு என விஜய் வர்கியா எச்சரிக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது. இதையடுத்துத்தான் அவர் கிரிக்கெட் மட்டையால் நகராட்சி அதிகாரியை தாக்கத் துவங்குகிறார். அவரது ஆதரவாளர்களும் அதிகாரிகளை தாக்கத் துவங்கினர்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட ஆகாஷ் விஜய் வர்கியா பாஜக மூத்த தலைவரும் மேற்கு வங்க பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்கியாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் வர்கியாவை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.